பார்ட் டைம் வேலையில் பல லட்சம் சம்பாதிக்கலாம்; ஆன்லைன் கும்பல் மோசடி

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பில் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த கும்பல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை குறி வைத்து டெலிகிராம் செயலி மூலம் லிங்க் அனுப்பி பணம் பறிப்பு. ஆன்லைனில் பணம் இருப்பதாக போலியாக சித்தரித்து மோசடி அரங்கேற்றம்.

சிறு முதலீட்டில் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறி ஏமாற்றிய கும்பல் சிக்குமா?. வேலூர் அருகே டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு  ஆசைக்காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் 2 நாளில் ₹5.51 லட்சம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

வேலூர் அடுத்த ஊசூர் பகுதியை சேர்ந்தவர் அமீன் (32), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 11ம் தேதி டெலிகிராம் செயலி மூலம் பார்ட் டைம் வேலை உள்ளதாக `லிங்க்’ வந்துள்ளது. இதனை நம்பிய அவர். அந்த `லிங்க்’கை பார்த்துள்ளார். அதில் சில `டாஸ்க்’ மூலம் வெற்றிபெற்றால் பல மடங்கு பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மேலும் சிறு தொகையை முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அமீன், சிறு தொகையை கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் முதலீடு செய்ய தொடங்கினார். குறிப்பாக ₹500 செலுத்தியதும் ₹1000 வந்தாகவும், ₹1,000 செலுத்தியதும் ₹2,000 கிடைத்ததாக கூறப்படுகிறது.

 இதையநம்பி அவர், அடுத்த பல தவணைகளாக மொத்தம் ₹5.51 லட்சத்தை முதலீடு செய்ததாக தெரிகிறது. முதலீடு செய்த பணத்திற்கு இரு மடங்கு போனஸ் சேர்ந்து இருப்பதாக  அந்த லிங்கில் காட்டியதாகவும் அதனை வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்ற போது  முதலீட்டுக்கான போனஸ் போலியானது தெரிய வந்துள்ளது.

அதிகளவு பணத்தை செலுத்திய நிலையில் பணம் திரும்ப கிடைக்கவில்லையாம். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்களை தொடர்புகொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

 இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அமீன், வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் புகார் செய்தார். அதன்பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *