சாலை விபத்தில் சட்டக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு; கொலை என சந்தேகம்

சிவகங்கை அருகே சாலை விபத்தில் சட்டக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு. கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு. சிவகங்கை நகர் காவல் துறையினர் விசாரணை.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே வேலாங்குளத்தில் நேற்று உறவினர்கள் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற உறவினர்களிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினருக்குமிடைய சிலர் காயமடைந்தவர்கள், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் காயமடைந்த சிவகங்கை காளவாசல் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை பார்ப்பதற்காக அவரது தம்பி சட்டக் கல்லூரி மாணவர் சரத்குமார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதனைக் கண்ட மற்றொரு தரப்பினர் சரத்குமாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் சரத்குமார் தப்பிச்சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து மற்றொரு தரப்பினர் காரில் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சிவகங்கை வந்தவாசி அருகே வல்லனி சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து சரத்குமார் உயிரிழந்துள்ளார் . சம்பவ இடம் வந்த சிவகங்கை நகர் காவல் துறையினர் சரத்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இறந்த சரத்குமாரின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு காரணம் மற்றொரு தரப்பினர் எனக் கூறி போலீசாரிடம் முறையிட்டனர். இதனை அடுத்து சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்தவாசி சாலையில் வரை போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகாமல் தடுக்க காவல்துறையினர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *