தீபாவளி சிறப்பு பேருந்துகள்: நள்ளிரவில் அமைச்சர் திடீர் ஆய்வு
தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நள்ளிரவு 1 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்கு சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் போன்ற வெளியூர்களுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு ஏராளமானோர் வந்திருந்தனர்.
மேலும் பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலம் சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து நவ.13 முதல் நவ.15 வரை கூடுதலாக 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நள்ளிரவு 1 மணியளவில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளையும், முன்பதிவு செய்த பயணிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.