பீகார் முதல்வரை கண்டித்து பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – தேசிய மகளிரணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் (30க்கும்) மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
பீகார் மாநில சட்டசபையில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து அம்மாநில முதலமைச்சர் நித்திஷ் குமார் பேசிய விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது., இதையடுத்து அவர் தனது பேச்சை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும் பீகார் முதல்வர் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிதிஷ் குமாருக்கும் அவரின் பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் : ‘பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பெண்கள் குறித்தும், மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்தும் அறுவருக்க தகவல் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சைக் கண்டித்து பாஜகவினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து நாடு முழுவதும் பாஜக மகளிர் அணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக நிதீஷ்குமார் கூறியுள்ளார். ஒருபுறம் இந்த நாட்டில் உள்ள பெண்களின் கல்வி, உடல் நிலை, பாதுகாப்பு, பெருமை மற்றும் கண்ணியத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மேடையிலும் பெண்களை உயர்வுபடுத்தும் வேலையை செய்து வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவர்களுடைய பெண்கள் குறித்த பார்வையை இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது.
இவர்கள் சேர்ந்து இந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதை இவர்களது பேச்சு காட்டுகிறது. இதை மகளிர் மத்தியில் பாஜக மகளிர் அணியினர் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத்துறை சார்பாக கூடுதலாக காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தற்போது தேவைக்கு ஏற்ப அளவில் முகாம்கள் நடத்தப்படவில்லை.
மருத்துவமனையில் நாள்பட்ட காய்ச்சல் சிகிச்சைக்காக பொதுமக்கள் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கும் கொரோனா ஏற்பட்டு வருகிறது. எனவே மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தொடங்க வேண்டும். வருமான வரித்துறையினர் சோதனையை பொறுத்த வரை நாடு முழுவதும் எங்கெல்லாம் ஆதாரங்கள் கிடைக்கிறதோ அதன் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.’ என தெரிவித்தார்.