100 முறை மனுவளித்தும் நடவடிக்கை இல்லை… வெள்ளிவிழா போராட்டம்
கரூர் அருகே சாலை வசதி கேட்டு 100- வது முறையாக மனு அளித்த கிராம மக்கள். அதிகாரிகளின் அலட்சிய போக்கை சுட்டிக்காட்டி உணர்த்தும் வகையில் 100- வது முறை மனு அளிக்கும் வெள்ளி விழா போராட்டம் என நடத்தினர்.
கரூர் மாவட்டம் மருதூரை அடுத்த விஸ்வநாதபுரம் சுப்பன் ஆசாரி களம் வழியாக கன்னி வாய்க்கால் வரை தார் சாலை அமைத்து கொடுக்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக கரூர் மாவட்ட ஆட்சியர்களிடம் இதுவரை 99 முறை மனு அளித்துள்ளனர்.
மனு பெற்ற ஒவ்வொறு முறையும் செய்து தருவதாக உறுதி அளித்த அதிகாரிகளின் வாக்குறுதி இன்று வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
சுமார் 50 குடும்பம் வசிக்கும் இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான நேரத்திற்கு பயணிக்க முடியவில்லை. குறிப்பாக சாலை வசதி இல்லாததால் சிகிச்சைக்கு கூட செல்ல முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது..
மழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் தினக் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர்களிடம் 99 முறை மனு அளித்துள்ளனர். மனு பெற்ற அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மனமுடைந்த கிராம மக்கள் அதிகாரிகளின் அலட்சிய போக்கை சுட்டிக்காட்டும் வகையில் 100-வது முறையாக அளிக்கும் மனுவை, வெள்ளி விழா மனு அளிக்கும் போராட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அலுவலக வளாகத்திற்குள் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் கலைந்து போகச் செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டுச் சென்றனர். 100 வது முறையாக அளிக்கப்பட்டு இருக்கும் கோரிக்கை மனுவிற்கு விடிவு பிறக்குமா? என எதிர்பார்பார்பில் கிராம மக்கள் உள்ளனர்.