விஜிலென்ஸ் அதிகாரி என கல்லூரி மாணவியை 3-வது திருமணம் செய்தவர் கைது
ரயில் பயணத்தில் விஜிலென்ஸ் அதிகாரி என அறிமுகமாகி கல்லூரி மாணவியை மூன்றாவதாக திருமணம் செய்த காதல் மன்னன் கைது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (25). கடந்த 2014 – 2017 ஆம் ஆண்டு மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அதே ரயிலில் பயணம் செய்த ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் அருள்ராயன் (40) என்பவர் தன்னை விஜி லென்ஸ் ஆஃபீஸர் என காயத்ரியுடன் அறிமுகமாகியுள்ளார். நட்பாக மாறி பின்பு காதலாகி 2017ம் ஆண்டு மதுரையிலேயே திருமணமும் செய்து கொண்டனர்..
பின்பு தனியாக வீடு எடுத்து மதுரையிலும் திருமங்கலத்திலும் இரண்டு வருடங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் தன்னை அருள் ராயன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காயத்திரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தன்னை பிசியான அதிகாரி போல காட்டிக் கொண்டு பல விதத்தில் காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் காயத்ரி குடும்பத்தாருக்கு சந்தேகம் வரவே அருள்ராயன் சொந்த ஊரான சுந்தரநாச்சியாபுரத்திற்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடைபெற்றதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. அதை கேட்டு காயத்திரி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் விஜிலென்ஸ் அதிகாரி இல்லை எனவும் தெரியவந்தது.
அதன் பின்பு அருள்ராயனை பிரிந்து காயத்ரி அவரது சொந்த ஊரான பட்டா குறிச்சியில் தாய்வீட்டில் 3 வருடமாக வசித்து வருகிறார். இதற்கிடையில் வீட்டிற்கு வந்த காயத்ரி அருள்ராயனிடம் விவாகரத்து கேட்டு வந்த நிலையில் அதற்கு சம்மதிக்காமல் இணைந்து வாழ வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புளியங்குடி காவல் நிலையத்திற்கு சென்ற காயத்திரி தன்னை குடும்பம் நடத்த வரவேண்டும் என அழைப்பதாகவும் இல்லை என்றால் பணம் தர வேண்டும் எனவும் அடிக்கடி மிரட்டி வருவதாகவும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய வரவழைத்து அருள் ராயனை காவல் துறையினர் அருள்ராயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.