மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
காளையார்கோவிலில் நடைபெறும் மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு. காளையார்கோவில் பொதுமக்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் இன்று 222 வது குருபூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனை முன்னிட்டு, மாவட்டம் முழுவதிலும் 15 சோதனை சாவடிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ராமநாதபுரம், மதுரை ,திண்டுக்கல், திருச்சி, வழியாக வரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள வழித்தடங்களில் வரவேண்டும்,
வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது, இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாட்டுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்குப் பிறகே காளையார் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறது.ஒவ்வொரு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கும் தனித்தனியாக நேரங்கள் ஒதுக்கப்பட்டு அந்தந்த நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாவட்ட மாவட்ட நிர்வாகம், அதேபோல, காவல்துறையினரிடமும் முன்பதிவு செய்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மருது பாண்டியர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் 25 டிஎஸ்பிக்கள், 80 ஆய்வாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு, காளையார் கோவில் நகருக்குள் பேருந்துகள் வர தடை விதிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன.