100 நாள் வேலை பெண்களின் மீது தீடீரென அறுந்து விழுந்த மின்கம்பியால் அதிர்ச்சி
மின்கம்பி அறுந்து விழுந்ததில் 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர் உட்பட்ட இருபெண்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் ஊராட்சியைச் சேர்ந்த முனியாண்டி மகள் ஜெயலட்சுமி(27) இவர் வயலோகம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் பணித்தள பொறுப்பாளராக உள்ளார்.
இவர் பணி செய்யும் பெண்களுக்கு தேனீர் வாங்கி கொடுப்பதற்காக வயலோகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் முதலிப்பட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்த குறைந்தழுத்த மின் கம்பி திடீரென அறுந்து இவர் மீது விழுந்ததில் தூக்கி வீசப்பட்ட இவர் பலத்த காயமடைந்தார்.
இவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு வயலோகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமிக்கு அங்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடன் பயணம் செய்த சாந்தி(35)என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மின் கம்பி அறுந்த விழுந்த வேகத்தில் இவர்கள் தூக்கி வீசப்பட்டதால் பெரும் விபத்து நிகழாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.