பரோட்டாவில் பூரான் விட்ட ஓட்டல்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
சீர்காழி அருகே தருமகுளம் கடைவீதியில் இயங்கும் உணவகத்தின் பரோட்டாவில் பூரான் கிடந்ததால் அதிர்ச்சி, உணவகத்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன் கடையை மூடிச் சென்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே தருமகுளம் கடை வீதியில் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஸ்டார் ஸீ (Star Sea) உணவகம் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பரோட்டா வாங்கிச் சென்றுள்ளார்.
வீட்டில் குழந்தைகளுக்கு பரோட்டாவை பிரித்து கொடுத்த போது தான் அதிலிருந்த குருமாவில் பூரான் ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மூர்த்தி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததார். அதன் பேரில் உணவகத்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி அபராதம் விதித்ததுடன் பராமரிப்பு இல்லாத கடையை முழுமையாக சீரமைத்து அதன் பின்னரே திறக்க வேண்டும் எனக் கூறி கடையையும் மூடி சென்றனர்.இதனால் தருமகுளம் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.