கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய குளிரூட்டும் ஓய்வறை திறப்பு விழா, பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரருக்கு பணி ஆணை வழங்கும் விழா, மற்றும் பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.

இவ்விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் தொழிலாளர்களுக்கான புதிய குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.

இதையடுத்து நடைபெற்ற விழாவில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஓட்டுநர், மற்றும் நடத்துநர் பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர். மேலும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பணி ஆணைகளை வழங்கி அமைச்சர்கள் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது. 15 ஆண்டுகள் ஓடிய பழைய பேருந்துகளை நிறுத்த வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 1500 பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டி உள்ளது. அதற்காக புதிய பேருந்துகளை தற்பொழுது வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதன் பிறகு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். விரைவில் அதற்கும் தீர்வு காணப்படும்.

எந்த பகுதிக்கும் பேருந்து இயக்கப்படவில்லை என தெரிவித்தால் உடனடியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படாத காரணத்தினால் பழைய பேருந்துகளை வைத்து  இயக்கம் சூழ்நிலை உள்ளது. தற்போது புதிய பேருந்துகள் வாங்க உள்ளோம். 

மேலும் 1500 பேருந்துகளை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 200 பேருந்துகள் பணிகள் முடிந்து வந்துள்ளது. மற்ற பேருந்துகளும் பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஆகவே இந்த பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *