பச்சை நிறமாக மாறிய தண்ணீர், செத்து மிதக்கும் மீன்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பச்சை நிறமாக மாறிய கண்மாய் தண்ணீர், செத்து மிதக்கும் மீன்கள், தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் கோரிக்கை.
பரமக்குடி அருகே வேந்தோணி கண்மாயில் உள்ள தண்ணீர் பச்சை நிறமாக மாறி மீன்கள் செத்து மிதப்பதால் தண்ணீரை வெளியேற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி பெரிய கண்மாய் உள்ளது. 410 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாயை நம்பி வேந்தோணி, முத்து செல்லாபுரம், செல்லூர் உள்ளிட்ட 17 கிராமங்களை சேர்ந்தவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த கண்மாய் தண்ணீரை நம்பி நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகின்றனர் கடந்த நான்கு ஆண்டுகளாக இக்கண்மாயில் நீர் வெளியேற்றப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கண்மாயில் இருந்த தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.
இதனால் கண்மாயில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. கண்மாய் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.கண்மாய் தண்ணீர் விஷத்தன்மையாக மாறி உள்ளதால் இந்த தண்ணீரை பருகும் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.