சாலை விபத்தில் அரசு மருத்துவமனையின் 2 பெண் ஊழியர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தற்காலிக பெண் ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு !
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அருகே எறஞ்சியை சேர்ந்தவர் தன்ராஜ் மனைவி கீர்த்தனா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வார்டு மேலாளராக பணிபுரிகிறார். தன்ராஜ் தனது மனைவி கீர்த்தனா மற்றும் அவருடன் பணிபுரியும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பரந்தாமன் மனைவி விஜயபாரதி ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
ரோடுமாமந்துார் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது அதே திசையில் முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பரை முந்தி செல்ல தன்ராஜ் முயன்றார்.
அப்போது எதிர்திசையில் ராஜா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது தன்ராஜ் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தன்ராஜ் அவரது மனைவி கீர்த்தனா, விஜயபாரதியும் ஆகிய மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் கீர்த்தனா, விஜயபாரதி மீது டிராக்டர் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தன்ராஜ் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி போலீசார் இறந்து போன இரு பெண்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.