விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேளியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!
விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிருக்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேளியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு – சடலத்தை மறைப்பதற்காக 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் வீச்சு – சடலத்தை பல இடங்களில் தேடி 3 மணிநேரத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர் – விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்த விவசாயி கைது – பெரும் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிருக்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.சடலத்தை மறைப்பதற்காக சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டில் சடலம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, இவருக்கு 3 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஏழுமலை வேர்கடலை பயிர் செய்து வந்த நிலையில் தினந்தோறும் காட்டுப்பன்றிகள் மற்றும் எலிகள் வேர்க்கடலையை நாசம் செய்து வந்தது.
இதனால் மன வேதனை அடைந்த ஏழுமலை காட்டுப்பன்றி மற்றும் எலி கொள்வதற்காக நேற்று இரவு சட்டவிரோதமாக வேர்க்கடலை பயிரைச் சுற்றி மின் வேலி அமைத்துள்ளார்.
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் மற்றும் அவருக்குத் துணையாக சிறுவன் ஆகிய 2 பேர் முயல் மற்றும் எலிகள் வேட்டையாடுவதற்கு இரவு நேரத்தில் ஏழுமலையின் விவசாய நிலத்திற்கு சென்ற போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி சக்திவேல் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து இரவு நேரத்தில் வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஏழுமலை சென்றபோது மின் வேளியில் சிக்கி சக்திவேல் உயிர் இழந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏழுமலை சடலத்தை மறைப்பதற்காக சக்திவேலின் உடலை கோணிபையில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் கிராமம் அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளே சென்று சாலையில் இருந்து ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த முள் புதரில் வீசி சென்றுள்ளனர்.
சிறுவன் அங்கு இருந்து வீட்டிற்கு சென்று காலை உறவினர்களிடம் கூறினான். இதையடுத்து சக்திவேலின் உறவினர்கள் கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது வயல் வெளியில் சக்திவேல் உடல் இல்லாததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் விவசாய நிலங்களில் பல இடங்களில் தேடினர். உடல் கிடைக்காததால் விவசாயி ஏழுமலையை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் சக்திவேலின் உடலை கோணிபையில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் கிராமம் அருகே அடந்த காட்டில் கொண்டு சென்று வீசியது ஒப்புக்கொண்டார்.
பின்னர் போலீசார் ராமாபுரம் கிராமம் அடர்ந்த காட்டிற்கு 12 கிலோமீட்டர் தூரம் சென்ற கீழ்கொடுங்காலூர் போலீசார் மற்றும் மேல்மருவத்தூர் போலீசார் இணைந்து சக்திவேலின் உடலை அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடினர். அப்போது உடல் சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத அதுவும் மக்கள் சென்று உடலை கைபற்ற முடியாத அளவில் உடல் இருந்தது.
அப்போது உடல் இருந்த இடத்திற்கு செல்ல முடியாத வகையில் அடந்த முள் புதர் இருந்ததால் போலீசார் திகைத்து நின்றனர். பின்னர் போலீசார் ஜேசிபி இயந்திரம் கொண்டு முள் புதரை அகற்றினர். பின்னர் போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கீழ்கொடுங்காலூர் போலீசார் 3 மணி நேரமாக சக்திவேல் உடலை தேடிய பிறகு அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்ததை கண்டு போலீசார் நிம்மதி அடைந்தனர். மேலும் இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.