ஓலா, ஸ்விகி ஆன்லைன் ஊழியர்களுக்கான நல வாரிய அறிவிப்பு
ஓலா, ஸ்விகி, ஸ்மோட்டா நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நல வாரிய அறிவிப்பு. தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்து விநியோக தொழிலாளர் நல சங்கத்தினர் நன்றி தெரிவிப்பு
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஓலா, ஸ்விகி, ஸ்மோட்டா போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சிதம்பரத்தில் தமிழ்நாடு அனைத்து விநியோக தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது நல வாரியம் அமைக்கும் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அந்த அமைப்பின் சிதம்பரம் நகர தலைவர் சாகுல்ஹமீது, தமிழக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு அனைத்து விநியோக தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதன் மூலம் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் காப்பீடு கிடைக்கும். மேலும் பல்வேறு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும். அதனால் இதை வரவேற்பதோடு, இதற்காக அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.