நிறை மாத கர்ப்பிணி கிணற்றில் குதித்து தற்கொலை; 

தேனி அருகே குடும்ப பிரச்சினையால் கிணற்றில் குதித்து நிறை மாத கர்ப்பிணி தற்கொலை. கோட்டாட்சியர் விசாரணை.

தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி போஸ். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் கடந்தாண்டு திருமணமாகி தம்பதியர் இருவரும் வசித்து வந்தனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள முருகேஸ்வரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்வு நடந்து பின் அதே பகுதியில் உள்ள அவரது தாய் மீனா வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் அங்கியிருந்த முருகேஸ்வரி நேற்று மாலை தனது தாயுடன் கோபித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 100அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி முருகேஸ்வரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் மீட்பு பணி தாமதமானது. 

இதையடுத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு நீர் மூழ்கி வீரர்கள் மூலம் நீண்ட நேரமாக போராடி முருகேஸ்வரியை சடலமாக மீட்கப்பட்டார். பின் பிரதேத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக கர்ப்பிணி பெண் முருகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் கர்ப்பிணி தற்கொலை வழக்கை உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

குடும்ப பிரச்சினையால் நிறை மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *