உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு… பரபரப்பில் மக்கள்

கிருஷ்ணகிரி அருகே மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிர்பால் உறவினர்கள் கலக்கம் – கிருஷ்ணகிரி மயானத்தில் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்..

கிருஷ்ணகிரி அருகே பெரிய முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால் சுனை  கிராமம் இங்கு நூற்றுக்கு மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை உறவினர்கள் சொந்த ஊரான பால்சுனை கிராமத்திற்கு நள்ளிரவு எடுத்து வந்தனர். 

அப்போது பால் சுனை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள புழுக்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்த வேலுவின் உடலை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் உடல்கள் கிராமத்தின் நடுவே எடுத்துச் செல்லக்கூடாது. அதிலும் பிரேத பரிசோதனை செய்த உடல்கள் கிராமத்திற்குள் எடுத்து வந்தால் தீமை ஏற்படும் அதனால் எடுத்துச் செல்லக்கூடாது என தெரிவித்து உள்ளனர்.

இதனால் நள்ளிரவில் இறந்தவரின் உடலை எங்கு எடுத்து செல்வது என தெரியாமல் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் உள்ள காந்திநகர் மயானத்தில் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கிருஷ்ணகிரி காவல்துறை கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

எங்கள் பால்சுனை கிராமத்திற்கு உடலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். ஆனால் கிராமத்திற்கு நடுவே உடலை எடுத்துச் செல்லக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சு வார்த்தையில் மருத்துவமனையில் சென்று உயிரிழக்கும் நபர்களின் உடல்களை வைப்பதற்காக தனியாக  கிராமத்தின் அருகே வழிப்பாதை இடம் ஒதுக்க பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம், 

தற்போது உயிரிழந்த வேலுவின் உடலை காந்தி நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யுமாறு காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர். இதை அடுத்து உயிரிழந்த வேலுவின் உடலை காந்திநகர் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *