மின்னல் வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சிறுவன் ஓட்டிய ஆம்புலன்ஸ்.
கோவை அருகே திரைப்படம் பார்க்க பைக்கில் வந்த இளைஞர்கள் மீது அதிவேகமாக 17 வயது சிறுவன் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் – அன்னூரை அடுத்துள்ள சாலைப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்(26). அதே ஊரைச்சேர்ந்த நண்பர் கனகராஜ் (37) இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில், அவிநாசி சாலையில் உள்ள தனியார் சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளனர். அங்கு டிக்கெட் கிடைக்காததால், கோவை சாலையில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர்.
அப்போது, இதில் சதீஷ் இருசக்கர வாகனத்தை போட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கோவை சாலையில் வளைவில் உள்ள தனியார் வங்கி அருகே அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அசுர வேகத்தில் நிலை தடுமாறி வந்த தனியார் ஆம்புலன்ஸ் சதீஷ் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பைக்கை ஓட்டி வந்த சதீஷ் என்பவருக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்தார்.
அதேபோல பின்னால் அமர்ந்து வந்த கனகராஜுக்கும் தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்ட சக வாகன ஓட்டிகள் உடனடியாக சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கனகராஜுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறு காயங்களுடன் தப்பிய சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஆம்புலன்ஸை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.