பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த எஸ்.ஐ மீது வழக்கு.!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ சப்பாணி மீது பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி இம்மானுவேல் கீழத்தெருவை சேர்ந்தவர் சப்பாணி(55). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். சப்பாணி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கூமாபட்டியில் உள்ள இமானுவேல் நடுத்தெருவைச் சேர்ந்த சசிகுமார் என்வரது வீட்டிற்கு சென்று, தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது மனைவி கத்தும் சத்தம் கேட்டு வந்த சசிகுமார், என்ன நடந்தது என கேட்டபோது சப்பாணி அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது அவர் தான் போலீஸ் உயர் அதிகாரி என்றும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் கூமாபட்டி காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எஸ்.எஸ்.ஐ சப்பாணி மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான வரை தேடி வருகின்றனர்.