மகளிர் சுய உதவி குழுவில் 51 லட்சம் ஏமாற்றிய 5 பேர் மீது வழக்குல்; ஒருவர் கைது..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தநாடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி வள்ளி, கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணதாஸ், கண்ணன் மகன் சின்னதுரை, ராமசாமி மகன் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சேந்தநாடு கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவை வைத்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த 24 பேரிடம் ரூபாய் 50 லட்சத்து 81 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு அந்த பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் சேர்ந்த நாடு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சிவசங்கர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை செய்து ஐந்து பேரை தேடி வந்த நிலையில் அதில் கிருஷ்ணதாஸ் (36) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகளிர் சுய உதவி குழுவின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 50 லட்சத்து 81 ஆயிரம் பணத்தை திரும்பத் தராமல் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது