என்எல்சி-க்கு எதிராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்..!
என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த முயற்சி. பேராசிரியர்கள் அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வடிகால் வாய்க்கால் வெட்டி வருகிறது. இந்த பணிக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களும் என்எல்சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
விவசாய விளை நிலங்களை அழிக்கும் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் திடீரென கல்லூரி வளாகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் கைகளில் விவசாயம் காப்போம் என்ற துண்டு பிரசுரங்களையும் வைத்திருந்தனர். மாணவர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பேராசிரியர்கள் அங்கு சென்று மாணவர்களுக்கு அறிவுரை கூறி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.