சூறாவளி காற்றால் பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது…!
பழனி முருகன் கோயிலில் இயக்கப்படும் ரோப்கார் சேவை காற்றின் வேகம் காரணமாக நிறுத்தப்பட்டது. பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மலைமீது செல்ல படிப்பாதை, யானை பாதை ,மின் இழுவை ரயில், ரோப்கார் சேவையை பயன்படுத்திவருகின்றனர்.
ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம் . நேற்று முன்தினம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் ரோப்கார் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட நிலையில் இன்று காலை ரோப்கார் சேவை துவங்கிய சில மணி நேரத்திலேயே காற்றின் வேகம் காரணமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் ரோப் கார் சேவை இன்று நிறுத்தப்படுவதாக ரோப்கார் ஊழியர்கள் அறிவித்தனர். ரோப்கார் சேவை இல்லாததால் மின் இழுவை ரயிலில் பயணம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்கள் படிப்பாதை வழியாகவோ, யானைப்பாதை வழியாகவோ மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.