பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து! 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!!
சிவகாசி அருகே தா யல்பட்டி பஞ்சாயத்து மண்குண்டாம்பட்டி கிராமத்தில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது . இங்கு சுமார் 30 அறைகளில் கேப் வெடி பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சிறுவர்களுக்கான கேப் வெடி எனப்படும் பொட்டு வெடியை இயந்திரம் மூலமாக தயாரிக்கும் போது ரசாயன மூலப்பொருள் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கேப் வெடி தயாரித்துக் கொண்டிருந்த விஸ்வநத்தத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்ற முருகலட்சுமி (வயது 31) மற்றும் மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த பாலசரஸ்வதி என்ற பானு (வயது 39) ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட உடனே அருகே உள்ள அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் மற்றவர்கள் யாரும் காயம் இன்றி உயிர் தப்பினர். தகவலறிந்த சிவகாசி மற்றும் வெம்ப கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து புகை மண்டலத்தையும் கட்டுப்படுத்தினர்.
இறந்த பெண் தொழிலாளர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.