காதல் திருமணம் செய்தவர்களிடம் கோவிலில் பாரபட்சம் காட்டுவதாக சார் ஆட்சியரிடம் புகார்
கும்மிடிப்பூண்டி அருகே காதல் திருமணம் செய்தவர்களிடம் கோவில் வரி வசூல் செய்யாமல் பாரபட்சம் காட்டுவதாக பொன்னேரி சார் ஆட்சியரிடம் முறையீடு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புக்குளம் கிராமத்தை சேர்ந்த உறவினர்களான மோகனபிரியா – பாலகிருஷ்ணன் இருவரும் கடந்த 3ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஊருக்குள் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் தொடர்பாக தங்களிடம் வரி வசூல் செய்ய மறுப்பதாக கூறி காதல் தம்பதியினர் பொன்னேரி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்து முறையிட்டனர்.
உறவினர்களான இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு 3ஆண்டுகளாகியும் கோவில் திருவிழாக்களுக்காக பிறரிடம் வசூலிப்பது போல தங்களிடம் கிராமத்தினர் வரி வசூலிப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். காதல் திருமண செய்தவர்கள் என்பதால் ஊருக்குள் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்களிலும் தங்களிடம் வரி வசூலிக்காமல் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர்.
தங்களிடம் வரி வசூலிக்காமல் புறக்கணிப்பது ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போல இருப்பதாக வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்து முறையிட்டனர். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதியளித்ததாக காதல் தம்பதியினர் தெரிவித்தனர்.