கோவிலில் 60-வது திருமணம் செய்ய எதிர்ப்பு.. உள்ளிருப்பு போராட்டத்தில் சிவனடியார்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய உட்பிரகாரத்தில் தனிநபர் ஒருவருக்கு 60-வது திருமணம் செய்ய அம்பாள் சன்னதி முன்பு கலசங்கள் வைத்து பூஜை செய்வதாக சிவனடியார்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நடை சாத்த விடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அருள்மிகு  கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் வெளிப் பிரகாரத்தில் உள்ள நால்வர் அரங்கம், புகழ்ச்சோழர் மண்டபங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக தனிநபர் ஒருவரின் 60-வது திருமணத்திற்காக அம்பாள் சன்னதியின் முன்புறம் கலசங்கள் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவனடியார்கள் பள்ளியறை நிகழ்விற்குப் பிறகு அம்பாள் சன்னதி முன்பு திரண்டு நடையை சாத்தவிடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று, அதற்கான தொகை செலுத்தி நிகழ்ச்சி நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால், இது போன்ற நிகழ்வுகள் இக்கோவிலில் இதுவரை நடந்தது இல்லை எனக் கூறிய சிவனடியார்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து இது தொடர்பாக செயல் அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இரவில் நடந்த சிவனடியார்களின் இந்தப் போராட்டம் காரணமாக கோவிலின் நடை சாத்த 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன், பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *