மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு இருளர் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம். சிதம்பரம் அருகே கிள்ளையில் இருளர்கள் ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம். மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இருளர் இன பெண்கள் நிர்வாணபடுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து’ சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட சிசில் நகர், எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், தளபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல நூற்றுக்கணக்கான இருளர் குடும்பத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிள்ளை பேரூராட்சித் தலைவர் மல்லிகா, பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவிந்திரன் ஆகியோர் தலைமையில் கிள்ளை கடைவீதியில் ஒன்று திரண்ட இருளர் சமூகத்தினர், கண்டன முழக்கங்களை எழுப்பியபடியே ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கிள்ளை தபால் நிலையத்தை அடைந்ததும் தபால் நிலையத்தின் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய பாஜக மோடி அரசுக்கு எதிராகவும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் மற்றும் துணைத் தலைவர், மணிப்பூர் மாநிலத்தில் இருளர் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து கிள்ளை பேரூராட்சி சார்பில் இங்கு வசிக்கும் இருளர் பழங்குடியின மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.
இன்று ஒரு நாள் இருளர்கள் தங்களது தொழில்களையும், பணிகளையும் புறக்கணித்து விட்டு தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறோம். மணிப்பூர் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து உலக நாடுகள் இந்திய நாட்டை பார்த்து காரி துப்புகின்ற அளவுக்கு மோடி அரசாங்கத்தின் செயல்பாடு இருக்கிறது என கூறினர்.