கர்நாடக அரசு பேருந்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்..! அபராதம் விதித்து கோட்டாட்சியர்
உதகையில் கர்நாடக மாநில அரசு பேருந்தில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்… பத்தாயிரம் அபராதம் விதித்து கோட்டாட்சியர் நடவடிக்கை.
நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதனையடுத்து நகராட்சி சந்தை, சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்கள், தங்கும் விடுதிகள், என பல்வேறு பகுதிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு அபராதமும் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிற மாநிலங்களான கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டாட்சியர் துரைசாமி தலைமையில் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கர்நாடக பேருந்தில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர பாட்டில்கள் இருப்பதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாடில்கள் பயன்படுதியதால் முதற்கட்டமாக பத்தாயிரம் அபராதம் விதித்ததோடு மீண்டும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பேருந்தில் பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.