சீனாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறல்
சீனாவில் உயிரிழந்த இளைஞரின் உடல் புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது வேதனையை ஏற்படுத்திய நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நேரில் சென்று ஆறுதல் கூறினார்
புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம் வீதியை சேர்ந்த ரவி (எ) மாணிக்கம்-விசாலாட்சி தம்பதியரின் மகன் வைத்தியநாதன்(23). இவர் சீன நாட்டில் உள்ள சிஞ்சோவ் மாகாணத்தில் செயல்படும் சிஞ்சோங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்பை முடித்து பயிற்சி எடுத்து வந்துள்ளார். மேலும் அவர் சில தினங்களில் சான்றிதழ் பெற இருந்த நிலையில் அவர் பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ஒரு ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது கடந்த மாதம் 15ம் தேதி ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இது வைத்தியநாதனின் குடும்பத்தினர் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்ட மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் சீனாவில் உயிரிழந்த வைத்தியநாதனின் உடலைக் கொண்டு வர கடந்த சில தினங்களாகவே முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்
சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்த வைத்தியநாதனின் உடல் புதுக்கோட்டை காமராஜபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் அவரது உடலை பெற்றோர் உறவினர்கள் பார்த்து கதறி அழுதது வேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் வைத்தியநாதனின் உயிரிழப்பால் மனம் உடைந்து செய்வதறியாமல் நிற்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்த புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆறுதல் கூறினார்.