தனியார் ஒப்பந்த டெண்டரை கைவிடகோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்…!
தூய்மை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம். ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட கோரி, ஈரோட்டில் இரண்டாம் நாளாக தூய்மை பணியாளர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் 1200.க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் உள்ள நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி தூய்மைப் பணிகளில் ஒப்பந்ததாரர்களை அனுமதித்தால், நிரந்தர பணியாளர்களும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும், தற்போது 707 ரூபாய் ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு ஊதியம் 532 ரூபாயாக குறைக்கப்படும், வேலைப்பளு அதிகரிக்கும் என தூய்மை பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..
ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யவும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதுடன் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு 725 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முதல் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்துள்ளனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரண்டாம் நாளாக இன்றும் பணிகளை புறக்கணித்து, மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்கள் முன்பாக இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை (10 மணிக்கு மேல்) தொடர உள்ளனர்..