போட்டோ மார்பிங் செய்து மிரட்டல்… ஆப் மூலம் கடன் வாங்கியவர் தற்கொலை…!
லோன் ஆப் மூலம் கடன் பெற்றவர்களின் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டி பணம் வசூல் செய்து வந்த மலேசியாவை சேர்ந்த இருவர் சென்னையை சேர்ந்த ஒருவரை கைது சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்த ஆந்திர போலீசார் கைது செய்தனர். இந்த விவரங்களை ராஜமகேந்திரவரத்தில் உள்ள திஷா காவல் நிலையத்தில் எஸ்பி சுதிர் குமார் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட கடையம் மண்டலத்தைச் சேர்ந்த எஸ்.ஹரிகிருஷ்ணா என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் உள்ள லோன் ஆப் மூலம் ₹ 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை சரியான நேரத்தில் அடைக்க முடியாய நிலையில் லோன் ஆப் நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணா செல்போனில் இருந்த புகைப்படங்களை மார்பிங் செய்து அதனை அனைவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி வந்துள்ளனர். இதனால் ஹரிகிருஷ்ணா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி. சுதீர்குமார் இதற்காக தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். தற்கொலை செய்து கொண்ட ஹரிகிருஷ்ணாவிற்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்கப்பட்டு டெல்லியை சேர்ந்த ஹரியோம், பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாதன் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அதோடு நிற்காமல், தங்களுக்கு கிடைத்த தகவலின் மூலம் சென்னையில் ஏஜென்சி நடத்தி வரும் மூன்று பேரை அடையாளம் கண்டு, அவர்களுடன் 20 நாட்களாக தொடர்ந்து தங்களுக்கும் ஏஜென்சி வேண்டும் என சாட் செய்து நம்ப வைத்தனர். இதன் ஒரு பகுதியாக, இவர்களது பரிவர்த்தனைகள் அனைத்தும் மலேசியாவில் இருந்து நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இதன் நிர்வாகிகள் மூன்று பேரையும் மலேசியாவில் இருந்து சென்னை வர வழைத்து விமான நிலையத்தில் வைத்து மலேசியாவைச் சேர்ந்த யங்லிஷிங் மற்றும் சூக்கைலுன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தியாகிராஜன் என்ற வினோத் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மலேசியாவின் 4 பாஸ்போர்ட்கள், 6 செல்போன்கள் மற்றும் அந்நாட்டின் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட டுலு மற்றும் ரிச்மண்ட் என்ற இருவரையும் பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கும்பல் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, தைவான், துபாய், வியட்நாம் போன்ற தெற்காசிய நாடுகளில் ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் மூலம் வங்கி கணக்குகளை சேகரித்து நிதி பரிவர்த்தனைகளை நடத்தி வருவது போலீசார் விசாரனையில் தெரிய வந்துள்ளது.
அதிக சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மற்றவர்களை சப் ஏஜென்ட்களாக நியமித்து கடன் வாங்கியவர்களை லோன் ஆப்ஸ் மூலம் அழைத்து அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் வசூலிக்கின்றனர் என எஸ்.பி. சுதீர்குமார் தெரிவித்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைந்து செயல்பட்ட ஏஎஸ்பி ரஜனி, டிஎஸ்பி கே.சீனிவாசலு, சிஐ பிவிஜி திலக், எஸ்எஸ்ஐக்கள் சீனிவாச ராவ், ஜெகன்மோகன், கேசவா, ஜிவிவி சத்தியநாராயணா, தலைமைக் காவலர்கள், காவலர்கள் ஆகியோரை எஸ்.பி. பாராட்டி ஊக்க தொகை வழங்கினார்.