ப்ளூ காய்ச்சல் எதிரொலி: எழும்பூர் மருத்துவமனையில் நிரம்பும் படுக்கைகள்..!!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் இன்றைய தினத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தொடங்கக் கூடிய ப்ளூ காய்ச்சல் எனப்படும் வைரஸ் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும். அந்த வகையில் இன்றைய தினத்தில் குழந்தைகளை அதிகமாக ப்ளூ காய்ச்சல் தாக்க தொடங்கியுள்ளது.
இதனால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் அதிகமாக குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. அதே போல் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தும் வசதியையும் மருத்துவ மனை நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.
இந்த காய்ச்சல் 2 முதல் 3 நாட்கள் குழந்தைகளை பாதிப்பதாகவும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனை தவிர மற்ற மருத்துவமனையிலும் குழந்தைகள் அதிக அளவு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.