விநாயகர் சதுர்த்தி: மாட்டுத்தாவணியில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..!
நாடு முழுவதும் நாளைய தினத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் விலை கிடுகிடுவென கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து 1800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் 400 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பிச்சி பூ 800 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 1000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதனிடையே பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்து, பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பூக்களின் விலை உயர்ந்தாலும்,பூக்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.