மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு!!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக 5 பேரை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாயார் விழுப்புரம் மகளிர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் 13ஆம் தேதி தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் தங்களை விடுவிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன் பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமீன் வழங்க வேண்டும் என விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு 5 பேருக்கும் ஜாமீன் வழங்கும்படி 2 வக்கீல்கள் வாதிட்டனர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் சங்கீதா குறுக்கிட்டு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முழுமை பெறாததால் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்கும்படி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.