தொடரும் சோகம்! 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..
கடந்த சில நாட்களாக நான் தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ராமாநாயுடு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதான தாமு. இவர் டிரைவராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. அவருடைய மனைவி ராஜேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கீச்சலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாமுவின் மகள் கங்கோத்திரி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தனது தாயின் மறைவிற்கு பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மாணவி கங்கோத்திரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் பொதட்டூர்மேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.