ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி!!
ஆடிப்பெருக்கையொட்டி மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலையானது ரூ.1200-ஆக உயர்ந்துள்ளது.
தென் தமிழகத்தில் மிகப்பெரிய மலர் சந்தையாக இருப்பது மதுரை மாட்டுத்தாவணியில் இருக்கும் பூ மார்க்கெட் ஆகும். கிட்டத்தட்ட இந்த பூ மார்க்கெட்டில் மட்டும் 15 மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் ஆடிமாதம் தொடங்கியுள்ளதால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
நாளைய தினம் தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுவதால் இன்றைய தினத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ வானது ரூ.1200-ஆக விற்பனையாகி வருகிறது. அதே போல் பிச்சி ரூ.700 ரூபாய்க்கும், முல்லை ரூ.700 ரூபாய்க்கும், சம்மங்கி ரூ.300, அரளி ரூ.300 ஆக விற்பனையாகிறது.
ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவதால் பூக்களின் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்துள்ளது. தென் தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து என்பது குறைந்துள்ளது.
மேலும், வரத்து குறைவாக காணப்பட்டதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் பூக்களின் விலையானது அதிகரிக்க கூடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.