பட்டப்பகலில் பயங்கரம்: அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை பூந்தமல்லி அடுத்த புளியம்படு பகுதியில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லியில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (22) என்பதும், வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு இருப்பது தெரியவந்தது. மேலும், மர்ம நபர்களை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.