நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!!!
குறுவை நெல் அறுவடை பணிகள் தொடங்கி விட்டதால் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் குறை தீர்ப்பு கூட்டத்தில் நெற்கதிர்களை எடுத்து வந்து கலந்து கொண்டவர்கள் ஆழ்குழாய் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்த பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
எனவே தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையம் திறப்பதுடன் ஈரப்பத்தை 17% முதல் 27%-ஆக உயர்த்துமாறு விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அதே போல் அனைத்து கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
நடப்பு பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையை வருகின்ற 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு மட்டும் வெளியிட்டதாக கூறிய விவசாயிகள் ஆனால் எந்தேந்த காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை என தெரிவித்தனர்.
இதனால் உடனடியாக காப்பீடு குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.