பராமரிப்பின்றி கிடக்கும் நறுமண சுற்றுலா தளம்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
திண்டுக்கல் மாவட்டத்தில் 50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட நறுமண சுற்றுலாத்தளம் பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும் அங்கு இருக்கும் அரிய வகை மரங்களை சமூக விரோதிகள் வெட்டி கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காமனூர் ஊராட்சி பட்லாங்காடு பகுதியில்கடந்த 2006-ஆம் தேதி 50 லட்சம் செலவில் நறுமண சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தாண்டிகுடி, காமனூர், வீசிப்பட்டி போன்ற பகுதிகளில் விளையும் நறுமணப்பொருட்களான ஏலக்காய், காப்பி, மிளகு மற்றும் வாழை மரங்கள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க அமைக்கப்பட்டது.
அதேபோல் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப தங்கும் விடுதிகளும் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் நறுமண சுற்றுலா தளத்தை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்குள்ள மரங்களை அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஒரு சிலர் வெட்டி செல்வதாகவும் அங்கு இருக்கும் அறைகளை 500 முதல் ஆயிரம் ரூபாய் வரையில் அதிகாரிகளின் அனுமதியுடன் வாடகைக்கு விடுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.