ஆடி கொண்டாட்டம்! காவிரியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு..
ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. காவிரி பவானி மற்றும் அமுத நதி சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி எனவும் முக்கூடல் சங்கமம், பரிகார ஸ்தலம் என, பெயர் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் ஆடி 1 அன்று தலையாடி கொண்டாடும் புதுமண தம்பதியர் தங்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை காவிரி ஆற்றில் குளித்து விட்டு, படியில் படையல் இட்டு பூஜை செய்வர்.
பின்னர், தங்களது மனைவிக்கு மாங்கல்ய கயிறு கட்டி, சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் மக்கள் கூடுவதற்கும் ஆற்றில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆற்றுக்கு செல்லும் பாதை மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரையில் பரிகாரம் செய்ய வந்தவர்களும், தலை ஆடிக்காக காவிரியில் குளிக்க வந்தவர்களுக்கும் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டது. காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், ஆற்றில் குளிக்க முடியாத போதிலும் பொங்கி வரும் காவிரியின் அழகை கண்டு ரசித்த மக்கள் சங்கமேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்து செல்கின்றனர்.