விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் – அன்பில் மகேஷ்
இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளதால் அதற்கு தகுந்தாற் போல் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார் .
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த வருடம் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை உள்ளதால் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் தெரிவித்தபடி முதலில் 9,400 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக இருந்தது. இதன் பின் இது 10,300 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள சூழலில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தன்னார்வலர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் கட்டிடங்களை கட்ட தாராளமாக முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டார்.