காசிமேட்டில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்வு!! எவ்வளவு தெரியுமா?
சென்னை காசிமேட்டில் கடந்த வாரத்தை விட இன்றைய தினத்தில் 200 ரூபாய் உயர்ந்த போதும் மீன் பிரியர்கள் மீன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காசிமேடு மீன் சந்தையில் சிறியது முதல் பெரிய அளவில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் கூட்டமானது கட்டுக்கடங்காமல் இருக்கும். அதன் படி இன்று அதிகாலை முதலில் இருந்து காசிமேடு மீன்சந்தையில் மீன்களை ஆர்வமுடம் மீன்பிரியர்கள் படையெடுத்து வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மீன்களின் விலையானது கடந்த வாரத்தை விட தற்போது 200 ரூபாய் உயர்ந்து உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1100 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சிரம் தற்போது ரூ.1300 ரூபாயாக உள்ளது. சங்கரா 400 ரூபாயில் இருந்து 450 ரூபாய்க்கும், வவ்வால் மீனானது 1300 முதல் 1400 வரையில் விற்பனையாகிறது.
அதே போல் கடல் இறால் 600 முதல் 700 ரூபாயாகவும், கொடுவா 700 முதல் 850 ரூபாய்க்கும் விற்பனையானது. நீலநண்டு 600 ரூபாய்க்கும், நெத்திலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலை உயர்வு மீன் வரத்து குறைவு போன்ற காரணங்களினால் ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் மீன்களின் உயர்வுக்கு காரணம் என கூறுகின்றனர்.