உயர்கல்வி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அன்மையில் உயர்கல்வி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த சான்றிதழ்கள் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதே போல் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை மாணவர்களிடம் இருந்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், சமூக நலத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவிகளின் சான்றிதழ் பெறுவதற்கு விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட சூழலில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.