பருத்தி விலை சரிவு! விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்…
அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமூர்த்தி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் நடைப்பெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் வேண்டுமென்றே விலை குறைவாக ஏலம் கூறப்பட்டதாக சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இங்கு நடைபெற்ற மறைமுக ஏலத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ பருத்து ரூ.115 வரையில் விற்பனையானது. ஆனால் இந்த வாரம் ஒரு கிலோ பருத்தி ரூ.60 ரூபாய்க்கு ஏலம் போனதாக கூறியதால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் சத்தியமங்கலம் ஈரோடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வியாபாரிகள் வராததால் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற இருந்த பருத்தி ஏலம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு பருத்தி குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலையாக விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும், தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றபோது பருத்தி குவிண்டாலுக்கு 9 ஆயிரம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதிகளில் 2 மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்து விவசாயிகள் விலகிக் கொண்டனர்.