கவனிக்க ஆளில்லை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 முதியவர்கள் தற்கொலை முயற்சி…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தங்களை கவனிக்க ஆளில்லாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முதியவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கம் அடுத்த வெங்கடேசம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி – சின்னப்பா தம்பதிக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் உள்ளன. விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவானதால் அவர்கள் தாய் தந்தையர்களை வீட்டில் விட்டு திருப்பூர் பகுதிக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமசாமி, அவரது மனைவி சின்னப்பா மற்றும் ராமசாமியின் அண்ணியான ஜக்கமா ஆகிய 3 பேரும் மூத்த மகன் சேகர் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் முதியவரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஆளில்லாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே 4 மகன்கள், மகள், பேரக்குழந்தைகள், வீடு மற்றும் நிலம் இருந்தும் கவனிக்க ஆளில்லாமல் மனவேதனையில் இருந்த மூன்று பேரும் இனி யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என முடிவெடுத்தனர். இதனால் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து 3 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
தற்போது மூன்று பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கவனிக்க ஆல் இல்லாமல் 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.