தாறுமாறாக உயர்ந்த வாழைத்தார்களின் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தினசரி சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காவேரி கரை ஓரப்பகுதிகளான ஜெடர் பாளையம், பிளிக்கல் பாளையம், வெண்ங்கரை, பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி மரமத்தி வேலூர் சந்தைகளுக்கும் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுச்செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில் சந்தைக்கு வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பூவன் வாழைத்தார் ஒன்றின் விலையானது 500 முதல் 700 வரையிலும், ரஸ்தாலி 600 ரூபாய்க்கும், அற்பூரவள்ளி 650 ரூபாய்க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் செவ்வாழை, பச்சை நாடார் உள்ளிட்டவைகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட நாட்களில் கோயிலுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வாழைப்பழத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வருகின்ற நாட்களிலும் வாழைத்தார்களின் விலை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.