ஷாக் நியூஸ்! பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி..
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் கூடலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக சாலையோரத்தில் மண் சரிந்து விழுந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் பாலம் கட்டும் பணி காரணமகா வாகனங்கள் ஒரு பாதையில் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த சூழலில் அந்த பகுதியில் நேற்று பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் 50 வயது மதிக்கத்தக்க மாயி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.