மக்களே உஷார்!! 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்தகுற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என கூறியுள்ளது.
மேலும், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் கூறியுள்ளது.