பெண்களை முறையாக நடத்த அறிவுரை வழங்கும் சென்னை போக்குவரத்துக் கழகம்

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும்அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் – ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ‘பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.
ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும்.
ஓட்டுநர் பேருந்தை குறித்த இடத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்ததிற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.
நடத்துனர்கள் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.
உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
நடத்துனர்கள் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என்று கூறி ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது.
வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.
பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும்’ என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.