அறிக்கையை சமர்பித்தது ஏ.கே. ராஜன் கமிட்டி

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் உள்ள பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதையும் என கண்டனம் நிலவி வருகிறது.
இதனால், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவில் உள்ளவர்கள் நீட் தேர்வினால் சமுதாயத்தில் பிந்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைச் சரி செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் நடைமுறைகளை மாற்றியமைப்பது குறித்த சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயங்களை ஆய்வு செய்து, ஏ.கே. ராஜன் தலைமையிலான கமிட்டி இன்று காலை முதலமைச்சரிடம் அறிக்கையை அளித்துள்ளது. இதன் பிறகு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் வந்த கருத்துகள், அதன் தன்மை, பாதிப்புகள், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கான பாதிப்புகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாதிப்புகள், பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரே நீட் தேர்வில் வெல்லும் நிலை, பெற்றோர், ஆசிரியர், மாணவர் தரப்பில் உள்ள பிரச்சினைகள், ஆதரவு கருத்துகள் உள்ளிட்ட பல அம்சங்களை ஆலோசித்து அதன் சாராம்சங்கள் மற்றும் அரசுக்கு கமிட்டியின் பரிந்துரை எனப் பல அம்சங்களுடன் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அறிக்கை அடிப்படையில் அரசு உயர் அலுவலர்கள், பள்ளிக் கல்வி, உயர் கல்வி அமைச்சர்கள் துறைசார் செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய பின்னர் உரிய முடிவெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாதாக இந்த கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வழக்கு தொடர்ந்ததும் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.