நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றால் தாஜ்மஹால் கூட இடிக்கப்படும்… உயர்நீதிமன்றம் அதிரடி

நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாலம் கட்டப்படுகிறது, எனவே, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கார்த்திகேயன், “இரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர் நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுமானத்தை நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், நடைபாதை கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் இருக்கிறது என்றார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய நீதிபதிகள், ”நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும். உயர் நீதிமன்றத்துக்கு வரும் பெரும்பாலான வழக்குகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே துறை வளர்ச்சிப் பணிகளுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்ததை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளாகவே உள்ளன.
வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றாலும் அவை இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. குறிப்பாக, நீர் வளங்களை பாதிப்பதாக இருக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்மந்தப்பட்ட நிலம் மற்றும் நடைபாதையை இடிப்பதற்க்கு ஆகும் செலவுகள் குறித்து தமிழக அரசும் தெற்கு ரயில்வேயும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.