இந்தியில் பதிலளிப்பதும் இந்தி திணிப்பே… ராமதாஸ் விமர்சனம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் படி, உள்ளூர் மொழிகளில் கேள்விகளில் கேள்வி கேட்பவர்களுக்கு அதே மொழியில் பதில் அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தமிழகத்தில் இருந்து தன்னார்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, அவரது வீட்டிற்கு பதில் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் அவரின் வீட்டின் முகவரியும், கேள்விக்கான பதிலும் இந்தியில் எழுதப்படிருந்தது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், ஆர்டிஐயில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளிப்பதும் இந்தி திணிப்பே என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பதிவில், “மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாக்களுக்குக் கூட இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.
இந்தி தெரியாத, இந்தி படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்கு இந்தியில் பதில் தரப்படும் போது அதை விண்ணப்பதாரர்களால் படித்து அறிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் விட உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே தவிர வேறல்ல.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாகப் பயன்படுத்தக்கூடாது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு அதே மொழியில் விடை தரும்படி அதிகாரிகளுக்கு அரசுகள் அறிவுறுத்த வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.